Wednesday, May 16, 2007

நவகிரக துதி

உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியே
ஓய்விலா வலம்வரும் செங்கதிரே
சூரியனே, நற்சுடரே - நீ எனக்கு
சுற்றம் சூழ சுகந் தருவாய்.

தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும்
தினமும் வளரும் வான்மதி நீயே
ஆளும்கிரக ஆரம்ப முதலே
அருளும் பொருளும் அருள்வாய் எனக்கு.

என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி
ஓங்கார சொரூபனே செவ்வாயே
ஏங்கிடும் அடியாரின் குறைநீக்கி
ஏவல் எனைக் காத்திடுவாய் வையகத்தே

வையகம் போற்றிடும் புத்திக்கு நாயகனே புதனே
வான்புகழ் கொள்வோரின் வெற்றிக்கு மூலவனே
நெஞ்சுக்கு நீதி தந்து நேர்மைக்கு இடமளித்து
நெடுங்காலம் வாழ அருள் புரிவாய் எனக்கு

அருங்கலையும் கல்வியும் அருளும் குருவே
அரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையே
குறைகள் அகற்றி குலம் தழைக்க
கருணை புரிவாய் காத்தருள்வாய்.

வயலும் வளமும் வழங்கிடும் சுக்கிரனே
உழவும் தொழிலும் சிறந்து ஓங்க
வறுமை நீங்கி வளமுடன் வாழ
வேண்டுவன அருள விரைந்து வருக

வருக வருக வாரி வழங்கும் வள்ளலே
வினை தீரத் துதிப்பேன் உன் புகழே
சடுதியில் வந்தென்னைக் காத்திடுவாய்
சங்கடங்கள் அகற்றிடுவாய் சனீஸ்வரனே

வரவேண்டும் தரவேண்டும் நின் அருளை - என்
வாடாத குடும்பத்தில் இராகுவே
எண்திசையும் புகழ் மணக்க
இசைந்தருள்வாய் இக்கணமே

கணப்பொழுதும் உனை மறவேன்
கோலம் பலபுரியும் கேது பகவானே
காலமெலாம் வளமுடன் வாழ
கண்திறப்பாய் கனிந்து.

No comments: